Wednesday, February 19, 2014

மௌன கூடுடைத்து...

நாம் இருவரும் பேசிக்கொள்ள பெரிதாய் காரணம் தேவையில்லை ஆயினும் தேடுகிறோம், ஆயிரம் காரணங்கள் உனக்கும் எனக்கும் வேண்டாம் எனினும் ஊருக்கு சொல்வதற்காய் உனது மௌனங்களும் எனது தயக்கங்களும் நிறைய பேசிவிடுகின்றன, வார்த்தைகளுக்கு மேலாய் ஏதும் இன்றி பேசிவிட்டு போவோமே இலைகளோடு பேசும் இளங்காற்றை போலே!!! அருண்குமார் சே

Friday, March 22, 2013

இழப்பின் பிறப்பு...

அறவழிகள் யாவும் அகதியாய் போயின
காந்தியம் போதும்
என் கணிப்பொறி மாற்றி
கனரக துப்பாக்கி ஒன்று கொடுங்கள்...
என் மொழி என்ற கவசம்
தன் இனம் என்றொரு விலாசம்
வேண்டாமடா ...
அனகொண்டாவும், டைனோசரும்
கொரிலாவும், கோட்சிலாவும்
கொல்லப்பட வேண்டியவை எனில்
சகமனிதன் குருதி குடிக்கும்
யாவும் கொல்லப்பட வேண்டியவையே ...
புலி என்று கூறி
கூண்டில் அடைப்பீர்
அன்றேல் அழி என்று கூறி
குண்டு துளைப்பீர்
ஆகட்டும் போ என்றே
அனைவரும் சேர்ந்தால்
சாகட்டும் என விடுவீரோ
ஒரு சரித்திர கூட்டத்தை ...
அறுத்தெறிந்த மார்புகளா
உம்மேல் அணுகுண்டு வீசின
அரும்பா மொட்டுகளா
உம்மேல் ஆயுதம் தொடுத்தன...
உமிழ் நீரில் தரித்ததோ
உன் தாயின் கர்ப்பம்
அரியாசனம் பெறவா
இத்தனை அற்பம்...
அட சீ .... போதுமடா
உங்கள் இறையாண்மை கொள்கை
நீங்கள் இரைகொண்ட
எங்கள் ஆண்மையின் வலிமை ...
வாக்கு சாவடிகளில் மட்டுமே
நீண்ட சுட்டுவிரல்கள்
வழக்காட நீள்கிறது
உங்கள் போக்குகளில் சென்ற
வையம் சற்றே மீள்கிறது ...
இதுவே தருணமென
இதயம் கொள்ளுங்கள்
இல்லை இனியும் முடியாதெனெ
இடுகாடு செல்லுங்கள் .....

அருண்குமார் சே

Thursday, March 21, 2013

நான் சிலையாகிறேன்...

சிலையோடு பேட்டிகாண்பது
சிறுமையல்ல நண்பர்களே
நிலைபெறா மானுட வாழ்வுதனில்
சிலைபெறல் எளிதல்ல...
எப்படி அடைந்தாய் இத்தனை தூரம்
என்ன சுமந்தாய் உன்னில் பாரம்
மெதுவாய் துவங்கினேன்...
பொதுவாய் கருவாய்
உருவாய் உருவான ஒன்று
சிலையாய் நிலையாய்
நிலைத்ததின் சூட்சமம் சொன்னது...
அரசியல் அரியணை அத்தனையிலும்
அடைக்கப்பட்ட ஆருயிர் எண்ணிக்கை சொன்னது...
புதைக்கபடா புராணங்கள் -
இன்னும் வளராத வரலாறுகள் -
சொன்னால் சலிக்காத
சரித்திரங்கள் சொன்னது...
தட்பவெட்பம் தாங்கும் தேகம்
இச்சை பிச்சை ஏற்கா தீரம்
சிலை கொள்ளும் அது
நீ என சிறுமை செய்தது...
உண்மையற்ற உயிர்களைவிட
உணர்ச்சியற்ற தான் மேலென
பெருமை சொன்னது...
சற்றே நான் திகைக்க
உள்ளூர் உதாரணம் சொல்லவா என்றது...
சரியென சிரமசைக்க,
சிலம்போடு ஒருத்திக்கு
மதுரை மிரண்டதை விட
சிலையான பின்னாலே
சென்னை மிரண்டது
அதிகமடா என்றது...

அன்புடன் அருண்குமார் சே

எங்கென தேடிட!!!

தொட்டாஞ்சிணுங்கியின் சிணுங்கள்
வீழும் அருவியின் பேரிரைச்சல்
தூவும் மழையின் ஈரம்
வீசும் காற்றின் மென்மை
கிளை விரித்த மரத்தின் நிழல்
மொட்டவிழ்ந்த பூவின் வாசம்
ரீங்காரமிடும் கொசுவின் சிறகு
ஓடும் நதியின் ஒரு சுதி
தகிக்கும் ஒளியின் வெட்பம்
யாவும் பதிக்கின்றன அதனதன் இருப்பை...
நான் வந்து சென்ற சுவடு தெரிவதில்லை
எனக்கும் கூட!!

அருண்குமார் சே

Friday, October 28, 2011

நான் கடவுள்....

யுகம் யுகமாய் பொறுத்துவிட்டோம்

தேவகுமாரனோ தேவதைகளோ

வந்தெம்மை மீட்கவில்லை...



அவதாரம் எடுத்து வந்து

அடியேர்களை காக்கவில்லை

அத்தனை சாமியும்...



ஐயா தேவகுமாரா!

நகர போக்குவரத்து நெரிசலில்

வரும் வழியில் தொலைந்தாயோ?



நாசி துளைக்கும்

குரல்வளை குமட்டும்

மூத்திர நாற்றத்தோடு

முச்சந்தியில் தூங்கியதுண்டா?



முதுகெலும்பு நொறுங்க

சுமந்து சேர்த்ததில்

மூணுவேளை உணவிற்கே

மூச்சுமுட்டுது அறிவாயா?!



மலப்புழுக்களை விடவும்

மலுங்கிய வாழ்க்கை

மனிதக்குழுக்கள் வாழ்வது தெரியாதா?!



நாங்கள் மட்டுமென்ன

நீ எழுதியாய் நம்பப்படும்

வாழ்க்கை புத்தகத்தில்

அச்சு பிழைகளா??



உன்னோடு கேட்பதெல்லாம்

வாழ்வல்ல! வரம் அல்ல!

அவதாரமல்ல! அனுகிரகமல்ல!

கருணையில்ல! மகிமையல்ல!

ஒப்பந்தம் - ஒப்பந்தம் மட்டுமே....



எங்கள் சூரியனை

நாங்கள் விதைப்போம்

எங்கள் மழைத்துளிகளை

நாங்கள் தெளிப்போம்...



ஜனனம் மரணம்

இரண்டும் வெல்வோம்

ஒரே ஒரு உறுதி கொடு

எங்கள் வாழ்வில் குறுக்கிடுவதில்லை என....



அருண்குமார் சே

வாழ்விலக்கணம்....

தன் ஒற்றொடு மட்டும்

இரட்டிக்கும் சுயநலம்...

உயிர் என வரின்

விட்டோடும் பேதமை...

உடற்சதைக்காய் உயிர்விடும்

சபலம், அவலம்...



ஆதியில் நீண்டது

இடை இடையே குறைந்து

ஈற்றில் தொலைந்ததே நிச்சயம்...



இயல்புகள் விகாரங்களாய் மிகைப்பட

விகாரங்கள் இயல்பாய் நடந்தேறுகிறது...

வன்புணர் வார்த்தைகளிலெல்லாம்

மறைந்து போகிறது எழுத்துக்களின் காயம்...



இலக்கணம் இதுவென ஆனபின்

எங்கனம் வழக்குரைப்பது?



அருண்குமார் சே

சாபமீட்டும் தனித்தவம்....

கன்னக்கோலிட்ட கனதளத்தின்
உள்ளீடற்ற துவாரமாய் சிரை
எந்த அகரமுதலியும் பொருள்விளக்கா
கூடி கதைக்க இயலா வாழ்க்கை சிறை...
நீல வான்நிற காதல் பறவை
கற்காரையாய் உருமாறும் பொழுதொன்றில்
இயல்பாக்கல் இல்லா ரணம் ...
சார்பாண்மை அற்ற சாமங்களில்
சல்லடை துளைத்து உருகியோடும்
வீதிவழி நேச பிழம்பொன்று...
பொது சராசரியில் பதக்கூறெடுத்தால்
விஞ்சி நிற்பது எதுவும்
விதை அல்ல பதர்...
நிலைப்பு தன்மை தொலைந்த
அண்மையில் முடிவுள்ள
இடுக்குவாழ் விலங்குகள்...
உருப்பெருக்காக் கருவிகள்
காந்தப்புயல் வீசினும்
கவர்வது இல்லை...
ஓர இடைவெளி இன்றி
நிறைகிறது வையம்
இணைசேரா கோடுகளில்...
தனிமை கூடுதனில்
அடைகாத்த யாவும்
தந்தவை எல்லாம் வெறுமை...
நிலைப்புறுத்தும் நினைவுகள்
தாக்கிடும் ஆயுதமாய்
அனுதினமும்....

அருண்குமார் சே