Friday, October 28, 2011

சாபமீட்டும் தனித்தவம்....

கன்னக்கோலிட்ட கனதளத்தின்
உள்ளீடற்ற துவாரமாய் சிரை
எந்த அகரமுதலியும் பொருள்விளக்கா
கூடி கதைக்க இயலா வாழ்க்கை சிறை...
நீல வான்நிற காதல் பறவை
கற்காரையாய் உருமாறும் பொழுதொன்றில்
இயல்பாக்கல் இல்லா ரணம் ...
சார்பாண்மை அற்ற சாமங்களில்
சல்லடை துளைத்து உருகியோடும்
வீதிவழி நேச பிழம்பொன்று...
பொது சராசரியில் பதக்கூறெடுத்தால்
விஞ்சி நிற்பது எதுவும்
விதை அல்ல பதர்...
நிலைப்பு தன்மை தொலைந்த
அண்மையில் முடிவுள்ள
இடுக்குவாழ் விலங்குகள்...
உருப்பெருக்காக் கருவிகள்
காந்தப்புயல் வீசினும்
கவர்வது இல்லை...
ஓர இடைவெளி இன்றி
நிறைகிறது வையம்
இணைசேரா கோடுகளில்...
தனிமை கூடுதனில்
அடைகாத்த யாவும்
தந்தவை எல்லாம் வெறுமை...
நிலைப்புறுத்தும் நினைவுகள்
தாக்கிடும் ஆயுதமாய்
அனுதினமும்....

அருண்குமார் சே

No comments: