Friday, October 28, 2011

நான் கடவுள்....

யுகம் யுகமாய் பொறுத்துவிட்டோம்

தேவகுமாரனோ தேவதைகளோ

வந்தெம்மை மீட்கவில்லை...



அவதாரம் எடுத்து வந்து

அடியேர்களை காக்கவில்லை

அத்தனை சாமியும்...



ஐயா தேவகுமாரா!

நகர போக்குவரத்து நெரிசலில்

வரும் வழியில் தொலைந்தாயோ?



நாசி துளைக்கும்

குரல்வளை குமட்டும்

மூத்திர நாற்றத்தோடு

முச்சந்தியில் தூங்கியதுண்டா?



முதுகெலும்பு நொறுங்க

சுமந்து சேர்த்ததில்

மூணுவேளை உணவிற்கே

மூச்சுமுட்டுது அறிவாயா?!



மலப்புழுக்களை விடவும்

மலுங்கிய வாழ்க்கை

மனிதக்குழுக்கள் வாழ்வது தெரியாதா?!



நாங்கள் மட்டுமென்ன

நீ எழுதியாய் நம்பப்படும்

வாழ்க்கை புத்தகத்தில்

அச்சு பிழைகளா??



உன்னோடு கேட்பதெல்லாம்

வாழ்வல்ல! வரம் அல்ல!

அவதாரமல்ல! அனுகிரகமல்ல!

கருணையில்ல! மகிமையல்ல!

ஒப்பந்தம் - ஒப்பந்தம் மட்டுமே....



எங்கள் சூரியனை

நாங்கள் விதைப்போம்

எங்கள் மழைத்துளிகளை

நாங்கள் தெளிப்போம்...



ஜனனம் மரணம்

இரண்டும் வெல்வோம்

ஒரே ஒரு உறுதி கொடு

எங்கள் வாழ்வில் குறுக்கிடுவதில்லை என....



அருண்குமார் சே

No comments: