Monday, April 6, 2009

சலனமற்று நகரும் இரவுகள்....

வெளிச்சம் கிழித்தெறிந்து
உட்பரவிய காரிருள் பொழுதொன்றில்
நிசப்தம் உடைத்தெறிகிறது
யாதொன்றுமற்ற சூன்ய வெளி....
மனம்பரவும் நம்பிக்கையற்று
மார்பு மேய்ந்தடங்கும்
உன்னில் நிறைந்திருப்பதெல்லாம்
மயான பிணம் தின்னும்
மாக்கள் வாசம்...
புணர்ந்தடங்கி சாய்கையில்
கடைவாயில் குருதிவழிய
கொடுரமாய் விழுகிறது
உனதந்த பிம்பம் உள்மனதில்....
அனுமதி அவசியமற்றுபோயினும்
ஆயத்தம் செய்தெடு
ஆசுவாசம் மெய்கொடு
அமைதி யுத்தம் உயிர்தொடட்டும்...
சற்றே தளர்த்து எறி
உனதிந்த சர்வாதிகாரம்
சலனமற்று நகரும் இரவின்
சாவொன்று நிகழும் விடிதலில்....

அருண்குமார் சே

No comments: